டொராண்டோ வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
டொராண்டோ பெரும்பாக பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு உருகுதல் மற்றும் வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படும் மழை காரணமாக நீர்நிலைகளின் அருகே அபாய நிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படவில்லை.
எனினும், மொத்த மழைவீழ்ச்சி, அதிகரித்த வெப்பநிலை மற்றும் பனி உருகுதல் ஆகியவற்றின் இணைப்பால் அனைத்து ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து, நீரோட்டம் வழக்கத்தை விட வேகமாகும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த காலநிலை மாற்றத்தால் நீர்மட்டம் திடீரென மாறக்கூடும். வேகமான மற்றும் பலமான நீரோட்டம், நிலைகுலைந்த ஆற்றங்கரைகள் மற்றும் பாதுகாப்பற்ற பனிப்படலம் ஆகியவை மக்களுக்கு ஆபத்தாக இருக்கும்” எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை அமைப்பான Environment Canada தெரிவித்ததாவது, டொராண்டோவில் வெள்ளிக்கிழமை 10 முதல் 15 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் அதேநேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 4°C வரை உயரக்கூடும் எனவும் கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இந்த பருவத்திற்கு வழக்கத்தை விட சுமார் 3°C அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமையும் 4°C வரை வெப்பநிலை காணப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை 0°C என்ற இயல்பான நிலைக்கு மீண்டும் திரும்பும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
டொராண்டோ துறைமுகப் பகுதிக்குச் செல்லும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தேவையற்ற சாகசங்களைத் தவிர்த்து, ஆறுகள், குளங்கள் மற்றும் துறைமுகப் பகுதிகளின் அருகே செல்லாமல் இருப்பது பாதுகாப்பிற்காக அவசியம் என அதிகாரிகள், வலியுறுத்தியுள்ளனர்.