ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை ; 3,700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்
ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவை தாக்கிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதீத வெப்பநிலைக்கு காலநிலை மாற்றமே முக்கியக் காரணமாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மட்டும் 2,025 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜூன் 22 முதல் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வீடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் 91 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெல்ஜியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,200 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
நெதர்லாந்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு 480-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வெப்ப அலைகளின் தீவிரம் காலநிலை மாற்றத்தின் விளைவாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதுடன், அதிக வெப்பநிலை நிலவும் காலங்களில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.