பதின் பருவத்தினருக்கு தடுப்பு மருந்து; பயான் டெக் நிறுவனம் திட்டம்
ஜெர்மனியின் பயான் டெக் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 12-15 வயதான பதின் பருவத்தினருக்கு தனது தடுப்பு மருந்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
பயான் டெக் நிறுவனம் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்து தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகின் அதிக வீரியம் கொண்ட தடுப்பு மருந்து என்ற பெயரை இந்த தடுப்பு மருந்து பெற்றுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களுக்கு பைசர் – பயான் டெக் தடுப்பு மருந்தை அளிக்க ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டு தலைவர்கள் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் வயோதிகர்களுக்கு தற்போது பயான் டெக் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கு தடுப்பு மருந்தை அளிக்க பயான் டெக் நிறுவனத்தின் தலைவர் உகுர் சாஹின் (Ukhur Sahin) திட்டமிட்டார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ,ஐரோப்பிய தடுப்பு மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு தங்களது நிறுவனம் இதுகுறித்து ஓர் விண்ணப்பத்தை அளித்துள்ளதாகவும் விரைவில் சிறார்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த தங்களது நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் மிகமிகக் குறைவாக இருக்கும் 15 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தற்போது தடுப்பு மருந்து செலுத்துவது அத்தியாவசிய தேவை இல்லை என்றாலும் கூட தடுப்பு மருந்து நிறுவனங்களில் சிறார்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்திய முதல் நிறுவனம் என்ற பெயரை பெற ஜெர்மானிய நிறுவனமான பயான் டெக் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலமாக ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் மத்தியில் பயான் டெக் நிறுவனத்திற்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.