பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று ; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது. பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முறைகள் காரணமாக HIV தொற்றுகள் அதிகளவில் கண்டறியப்படுவதுடன், தொற்றுக்குள்ளானவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்குவதற்கும் இது உதவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இலவசமாகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ரகசியத்தன்மையுடனும் HIV பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை விரிவுபடுத்த பீஜி நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அத்துடன், HIV தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துவதுடன், ஊசி மூலம் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கான பாதிப்பு குறைப்பு சேவைகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
UNAIDS தகவலின்படி, ஊசி மற்றும் சிரிஞ்ச் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, பீஜி நாட்டில் புதிய HIV தொற்றுகளின் எண்ணிக்கை 2010 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் சுமார் 9,100 பேர் HIV தொற்றுடன் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே தங்களது HIV நிலையை அறிந்திருந்தனர். மேலும், 22 சதவீதம் பேர் மட்டுமே எதிர்வைரஸ் சிகிச்சையைப் பெற்று வந்தனர்.
தொற்று ஏற்பட்ட விதம் உறுதிப்படுத்தப்பட்ட HIV சம்பவங்களில், பாதிக்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்பு மூலம் பரவியுள்ளதுடன், 42 சதவீதத்துக்கும் அதிகமானவை ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதுடன் தொடர்புடையவை என UNAIDS தெரிவித்துள்ளது.
இதனிடையே, பீஜி நாட்டில் HIV தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உள்ள கொள்கை மற்றும் நடைமுறைத் தடைகளை அகற்றும் நோக்கில், ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.