நீதி வேண்டும்: இந்திய இளைஞருக்கான கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில் கனேடிய மக்கள்
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் மர்ம நபரால் கொல்லப்பட்ட இந்திய இளைஞருக்கான கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் நோவா ஸ்கோடியா நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட கண்ணீர் அஞ்சலி கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஞாயிறன்று ட்ரூரோ பகுதியில் உள்ள குடியிருப்பில் வைத்து 23 வயதேயான பிரப்ஜோத் சிங் கத்ரி மர்ம நபரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை ட்ரூரோ பொலிசார் ஒரு படுகொலை என்றே கருதுவதாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்தும், உரிய விசாரணை முன்னெடுக்காமல் விடுவித்துள்ளதையும் பொலிசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால், தீவிரமாகவே விசாரணையை முன்னெடுத்துவருவதாக பொலிஸ் தரப்பு உறுதி அளித்துள்ளது. இந்திய மாநிலம் பஞ்சாபில் இருந்து 2017ல் கனடாவுக்கு வந்த பிரப்ஜோத் சிங் கத்ரி, இங்கேயே கல்வியை முடித்துள்ளதுடன், ஒரு வாடகை டாக்ஸி நிறுவனத்தில் பணியாற்றியும் வந்துள்ளார்.
பொருளாதார ரீதியாக மிகவும் பிந்தங்கிய குடும்பம் தங்களுடையது என குறிப்பிட்டுள்ள பிரப்ஜோத் சிங் கத்ரியின் சகோதரி, தமது சகோதரரின் இழப்பு தங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்றார்.
இந்த வழக்கில் தங்களுக்கு நீதி வேண்டும் எனவும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல எண்ணிக்கையிலானோர் கனடாவுக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரூரோ பொலிசாரின் நடவடிக்கை தங்களுக்கு நீதியை பெற்றுத்தரும் என சமூக மக்கள் அனைவரும் நம்புவதாக கொல்லப்பட்ட இளைஞரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் சுமார் 500 பேர்கள் வரையில் பங்கேற்றுள்ளதாகவும், அனைவரும் தங்கள் பாதுகாப்பில் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகம் மட்டுமல்ல, யாரும் இங்கே பாதுகாப்பாக இல்லையோ என்ற கவலை எழுந்துள்ளது என்றார் அந்த இளைஞர்.