சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் - மனைவி கட்டுநாயக்காவில் கைது
பண மோசடி தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் மற்றும் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய கணவனும் 43 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல கோடி ரூபா மோசடி
சந்தேக நபரான கணவன் நேற்றைய தினம் பிற்பகல் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் மனைவி தனது 14 வயதுடைய மகனுடன் நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கணவனும் மனைவியும் பல கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நீதிமன்றங்களினால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.