மனைவியின் நடத்தையில் சந்தேகம்...ஊசிநூலை வைத்து கணவன் செய்த கொடூரம்
தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவரது பெண் உறுப்பை தைத்த கணவன் தலைமறைவாகியுள்ளார்.
இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரோலி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான நபர், தன் 52 வயதான மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த இன்னொருவருடன் தகாத உறவு உள்ளதாக சந்தேகப்பட்டதையடுத்து இந்த விபரீதம் நிகழ்ந்தது. ஓகஸ்ட் 24 அன்று மாவட்ட தலைமையகத்திலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மாடா பொலிஸ் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ரைலா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அனில் சோன்கர் தெரிவித்தார்.
மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக கூறி சித்திரவதை செய்து வந்த அந்த நபர், அதன் உச்சக்கட்டமாக மனைவியின் அந்தரங்க பகுதியை தைத்துள்ளார். கணவரின் இந்த செயலை தாங்க முடியாத பாதிக்கபட்ட பெண், கணவர் மீது பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய அந்தரங்க உறுப்பில் தையல் போட்ட ஊசியும், நூலும் நீக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது, ‘இதுபோன்ற வெறி செயலை நாங்கள் பார்த்ததில்லை. மருத்துவத்துக்கு பயன்படுத்தும் நூலுக்கு பதிலாக சாதாரண ஊசி மற்றும் நூலால் தையல் போட்டுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வயது தம்பதியருக்கு திருமணமான குழந்தைகள் உள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
பிரிவுகள் 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியது), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் காயப்படுத்தியது), 498 (கிரிமினல் நோக்கத்துடன் தடுத்து நிறுத்தல்) மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய ஏற்பாடுகளின் கீழ் ஒரு வழக்கு பந்தோரா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.