இஸ்ரேலிய வான்வெளி தாக்குதலில் உயிரிழப்பதையே நான் விரும்புகிறேன்! ஹமாஸ் அமைப்பின் தலைவர்
கொரோனா வைரசால் உயிரிழப்பதை விட இஸ்ரேலிய வான்வெளி தாக்குதலில் உயிரிழப்பதையே நான் விரும்புகிறேன் என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வந்தது.
அந்த மோதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு தரப்பிற்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேல்-காசா இடையே தற்போது மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதும் ஹமாஸ் அமைப்பின் தலைவராக யெஷ்யா சின்வார் என்பவர் செயல்பட்டு வருகிறார். இருதரப்பு மோதலின் போது இவரின் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
ஆனால், பூமிக்கடியில் ஏற்படுத்தப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை வழியாக யெஷ்யா சின்வார் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச்சென்றார். இதனால், அவர் உயிர்பிழைத்தார்.
தற்போது, சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதையடுத்து சண்டையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா முனை பகுதிக்கு கத்தார் போன்ற நாடுகளும், ஐ.நா. சபையும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. காசாவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அமெரிக்காவும் உறுதியளித்துள்ளது.
குறிப்பாக, இஸ்ரேலிய தாக்குதலில் காசா முனையின் இருந்த ஒற்றை கொரோனா பரிசோதனை மையமும் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது. இதனால், காசா முனையில் யாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காசா முனையில் உள்ள சுகாதார கட்டமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள காசா முனையை சீரமைப்பதில் உலகநாடுகள் செய்யும் உதவியில் ஒற்றை டாலர் பணத்தையும் தாங்கள் எடுக்கப்போவதில்லை அனைத்தும் காசா முனையை சீரமைக்கவே பயன்படுத்தப்படும் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலிய தாக்குதலுக்கு பின்னர் முதல்முறையாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் யெஷ்யா சின்வார் நேற்று காசா முனையில் பொதுமக்களிடையே பொதுவெளியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது யெஷ்யா சின்வார் பேசுகையில், இஸ்ரேல் எனக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்னை படுகொலை செய்வதுதான்.
கொரோனா வைரஸ்
மற்றும் பிற நோய்களால் உயிரிழப்பதை விட இஸ்ரேலிய விமானப்படையின் எஃப்-16 ரக போர் விமான தாக்குதலில் ஒரு வீரனாக உயிரிழப்பதையை நான் விரும்புகிறேன்’ என்றார்.