400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விடுவிப்புக்கு IEA அனுமதி
ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் அறிவித்துள்ளார்.
சர்வதேச எரிசக்தி முகவரகம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சந்தைக்கு விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மொத்தம் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது IEA அமைப்பின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிராத மிகப்பெரிய எண்ணெய் விடுவிப்பாகக் கருதப்படுகிறது.
ஈரானின் அண்மைக்கால எச்சரிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் 32 உறுப்பு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இந்த அவசரகால இருப்புகள், ஒவ்வொரு உறுப்பு நாட்டின் தேசிய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான காலக்கெடுவுக்குள் சந்தைக்குக் கிடைக்கும் என IEA தெரிவித்துள்ளது.
1991, 2005, 2011 மற்றும் 2022 இல் இரண்டு முறை என இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் இவ்வாறான கூட்டு எண்ணெய் விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஆறாவது தடவையாக எண்ணெய் விடுப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.