திமுக வெற்றி பெற்றால்... அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் தெரியுமா?
சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தால், அதிமுகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது என்றும், கட்சிக்குள் மறைமுக பிளவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் இரு தினங்களில் வெளியாக உள்ளன. இதில் எந்த கட்சி ஆட்சியை அமைக்கும் என்று கட்சியினர் மட்டுமல்ல மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதில் திமுகவுக்கே பெரும்பாலான ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, ஆனா திமுக ஆட்சியை கைப்பற்றினால் ஜெயலலிதா கோலோச்சிய அதிமுகவில் பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திமுக ஒரு பக்கம் குதூகலத்துடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்க, மறுபுறம் அதிமுகவில் மறைமுக சலசல ஏற்படலாம். அதுவும் இந்த சலசலப்புக்கு ஓ.பன்னீர்செல்வமே காரணமாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தேர்தல் முடிந்ததும், தனது கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் முதல்வர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஓபிஎஸ் குறை பாடியிருந்தார்.
தற்போது தோல்வி உறுதியானால் அவ்வளவு தான்… அவரது வெறுப்பெல்லாவற்றையும் கட்சி உறுப்பினர்கள் வாயிலாக வெளியே தெரிவிக்க கூடும். இதனால் கட்சி மட்டத்தில் இருந்த பிரச்னை நாடே பார்க்கும் சூழலுக்கு உருமாறும் என்று சொல்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து கட்சிக்குள் பிளவு ஏற்பட தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் முக்கிய காரணிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்பிருந்தே தினகரனை அதிமுகவுடன் இணைக்க பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
எனவே அதிமுக இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிகளாக பிரிய அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தருணத்தில் பாஜக தலைமை அதாவது டெல்லி மேலிடம் தலையிட்டு, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக செயல்படலாம் என்றும் சிலர் கணிக்கின்றனர்.
இதனால் இபிஎஸ் தனது கட்சி பலத்தை இழக்க நேரிடலாம்.. இந்த சூழ்நிலையில் இபிஎஸ் எப்படி செயல்படுகிறார் என்பதை வைத்தே, அடுத்தக்கட்ட செயல்பாடுகள் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை ஓபிஎஸ்ஸின் குரல் ஒலித்தால், அமுமுகவை தாய் கழகமான அதிமுகவுடந் இணைக்க முற்படலாம் என தெரிகிறது. மேலும் எடப்பாடி ஆதரவாளர்களும் இந்த நெருக்கடி சூழலில் ஓபிஎஸ் பக்கம் தாவலாம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் திமுக கலங்கிய குட்டைக்குள் மீன் பிடிப்பது போல் தனக்கு வேண்டியவர்களை தன் பக்கம் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஓ.பி.எஸ்ஸின் ஒரே குறி கட்சியை அவர் அதிகார வளையத்தில் கொண்டு வருவதாகவே மட்டுமே இருக்கும்.
இப்படி சூழல்கள் நிகழ்ந்தால், பத்திரிக்கை, இணையதள வகுப்புவாத கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது. அதிமுகவில் சில சரிவுகள் ஏற்பட்டாலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.கவோ அதனை கண்டுகொள்ளாது, பாஜகவுடன் நேரடியாக கைகோர்க்கும் என அரசியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர் .