நாளுக்கு 6 பேர்... கனேடிய மாகாணம் ஒன்றில் நீடிக்கும் பொது சுகாதார அவசரநிலை
கனேடிய மாகாணம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பொது சுகாதார அவசரநிலை நீடிக்கும் நிலையிலும் போதை மருந்தால் 10,000 பேர்கள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் போதை மருந்து பயன்பாடு காரணமாக பொது சுகாதார அவசரநிலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் போதை மருந்து பழக்கத்தால் 10,000 பேர்கள் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் மட்டும் குறைந்தது 1,095 பேர்கள் போதை மருந்துக்கு பலியாகியுள்ளனர். சட்டவிரோத போதை மருந்து புழக்கம் மாகாணத்தில் அதிகரித்துள்ளதாகவும், இதுவே அதிக இறப்புக்கு காரணம் எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் போதை மருந்துகளால் ஏற்படும் இறப்புகள், 2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையானது சமீப ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இறப்புகலின் எண்ணிக்கையை விட மிக அதிகம் என தெரிவிக்கின்றனர்.
இறந்தவர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆண்கள் மற்றும் அதே சதவீதத்தினர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், சட்டவிரோத போதை மருந்தால் நாளுக்கு 6 பேர்கள் சராசரியாக பலியாவதாக உடற்கூராய்வாளர்கள் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 1,000 பேர் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தால் இறந்தனர் என்பதே அதிகபட்சமாக கருதப்பட்டது.