தடுப்பூசி பெறும் எவருக்கும் ஊக்கத்தொகை: அறிவித்த கனேடிய மாகாணம்
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கனேடிய மாகானம் ஒன்று ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அனைவருக்கும் 100 டொலர் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது ஆல்பர்ட்டா மாகாணம்.
குறித்த தகவலை முதல்வர் Jason Kenney மற்றும் சுகாதார அமைச்சர் Tyler Shandro ஆகியோர் வெள்ளிக்கிழமை பகல் அறிவித்துள்ளனர். ஊக்கத் தொகை அளிக்கும் திட்டமானது 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 14 வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று ஷான்ட்ரோ கூறியுள்ளார். செப்டம்பர் 13ம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆல்பர்ட்டா மக்கள் அனைவருக்கும் 100 டொலர் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
12 வயதுக்கு மேற்பட்ட ஆல்பர்ட்டா மக்களில் இதுவரை 70.2 சதவீதம் பேர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி தகுதிவாய்ந்த ஆல்பர்ட்டா மக்களில் 78.3 சதவீதம் பேர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.