இந்தியாவில் 12 கடலோர மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம் - நாசா எச்சரிக்கை
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் இமயமலை உள்ளிட்ட பனிமலைகளிலும் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது.
அதில், 2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள 12 நகரங்கள் வருமாறு;-
கண்ட்லா, குஜராத் - 1.87 அடி , ஒக்ஹா, குஜராத் - 1.96 அடி , பவுநகர், குஜராத் - 2.70 அடி , மும்பை, மகாராஷ்டிரா- 1.90 அடி , மோர்முகாவ், கோவா - 2.06 அடி , மங்களூர், கர்நாடகா - 1.87 அடி , கொச்சி, கேரளா - 2.32 அடி , பரதீப், ஒடிசா- 1.93 அடி , கிதிர்பூர், கொல்கத்தா - 0.49 அடி, விசாகப்பட்டினம், ஆந்திரா - 1.77 அடி , சென்னை, தமிழ்நாடு - 1.87 அடி ,தூத்துக்குடி, தமிழ்நாடு - 1.9 அடி.
தற்போதைய கால நிலையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர்மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.