திடீரென மாலைத்தீவுக்கு படையெடுக்கும் பிரபல நாட்டு மக்கள்!
கொரோனா தொற்றில் சிக்கித் தவித்த அமெரிக்காவில் மளமளவென்று தடுப்பூசி போடத் தொடங்கினார்கள். இலவசமாகப் போடப்பட்டாலும், கடந்த 7 மாதங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுள்ளனர்.
டெல்டா வகை கொரொனா பரவத் தொடங்கிய பிறகு அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க குடிமக்கள், க்ரீன்கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து நேரடியாக வருவதற்கு அமெரிக்கா அனுமதித்துள்ளது. அதுவும் இந்தியாவிலிருந்து நேரடி விமானம் அல்லது கத்தார் வழியாக மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது துபாய் வழியாக வருவதற்கும் அனுமதி தொடங்கியுள்ளது.
இந்தியக் குடிமக்கள் விசாக்கள் வைத்திருந்தாலும் அமெரிக்காவுக்கு வர அனுமதிக்கப்படவில்லை. இதனால் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு வழக்கமாக கோடை காலத்தில் அமெரிக்காவுக்கு வருகை தரும் பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
இவர்களுக்கு ஒரு தீர்வாக மெக்சிகோ சென்று அங்கே 14 நாட்கள் தங்கி இருந்து விட்டு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அதாவது இந்தியர்கள், அனுமதிக்கப்பட்ட சில நாடுகளில் 14 நாட்கள் தங்கி இருந்து விட்டு பின்னர் அமெரிக்கா நுழைவதற்கு தடையில்லை.
இதனால் மெக்சிகோ வழியாக சில பெற்றோர்களும் ஹெச்1 விசாவில் இருப்பவர்களும் அமெரிக்கா வரத் தொடங்கினார்கள். மெக்சிகோவில் 14 நாட்கள் தங்கி வருவது பலருக்கும் சிரமமாக இருந்தது.
பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் இப்படி மெக்சிகோ வழியாக வருபவர்கள் ஒன்றிணைந்து, மெக்சிகோவில் தங்கும் நாட்களில் ஒருங்கிணைந்து ஒன்றாக ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து வந்தார்கள்.
சைவ, அசைவ இந்திய உணவுகளுக்கும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலத்தீவில் 14 நாட்கள் தங்கி வருவதற்கும் தற்போது அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
அண்டைநாடான மாலத்தீவில் விசா, தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகள் எளிதானதாக இருப்பதால் தற்போது மாலத்தீவு வழியாக அமெரிக்கா வருவதற்கு பெற்றோர்கள் அலைமோதுகிறார்கள். வாட்ஸ் அப் குழுக்கள் உருவாகி ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் இந்த அனுமதியால், மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு 14 நாட்கள் அங்கேயே தங்க வேண்டியிருப்பதால் சுற்றுலாத் தொழிலுக்கும் உதவியாக இருக்கிறது.
அமெரிக்காவின் ஒரே அறிவிப்பு மாலத்திவுக்கு லாட்டரி கிடைத்தது போல் அமைந்து விட்டது. மெக்சிகோவுக்கு இந்தியர்களால் தற்காலிகமாக கிடைத்து வந்த சுற்றுலா வருமானம் குறையத் தொடங்கியுள்ளது.