125 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி
இஸ்கான் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.
சுவாமி பிரபுபாதா கிருஷ்ணருக்கான சர்வதேச தொண்டு அமைப்பை ஏற்படுத்தினார். இஸ்கான் என்றும், ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றும் அது அறியப்படுகிறது. இவ்வமைப்பு பகவத் கீதை மற்றும் பல வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது. வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் சிறப்பான பங்கை வகிக்கிறது. மேலும், சுவாமி பிரபுபாதா நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவியுள்ளார்.
பல நூல்களை எழுதியுள்ளார். 1977-ல் உ.பி.,யில் தனது 82-வது வயதில் இறந்தார். 1896 செப்டம்பர் முதல் தேதியில் பிறந்த அவருக்கு இன்று 125-ஆவது பிறந்த தினமாகும். அதனை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று காணொளி காட்சி மூலமாக 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். ஹரே கிருஷ்ணா என்று கூறி தனது உரையை தொடங்கினார் பிரதமர்.
இந்நிகழ்ச்சியில் இஸ்கான் அமைப்பின் தலைவர் கோபால கிருஷ்ண கோசுவாமி மஹாராஜ் மற்றும் இஸ்கான் கோயில்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.