இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான் வெளியில் பயன்படுத்த தடை
இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த செப்டம்பர் 23 திகதி வரை பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் திகதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா. இதற்குப் பதிலடியாக, பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்களும் இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்தியத் தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்தது.
இந்தநிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 23 வரை நீட்டித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து இந்திய விமானங்களுக்கு ஏப்ரல் 23 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.