கந்தஹார் இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடல்!
கந்தஹாரில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்.
ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.
அதன்படி, நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப். 11-ஆம் தேதிக்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அதிபா் பைடன் அறிவித்திருந்தாா்.
அதன்படி, படையினரை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடங்கியது. அந்தத் தேதிக்கு முன்னதாகவே அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க படைகள் விலகி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய பிராந்தியகளை தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவருகின்றன. கிட்டத்தட்ட 85 விழுக்காடு நிலபரப்பை கட்டுப்பாட்டில் எடுத்தவிட்டதாகவும் தலிபான் அறிவித்தனர்.
இதனால், முக்கிய நகரங்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.
இந்நிலையில், கந்தஹாரில் உள்ள தங்களின் தூதரகத்தை இந்தியா தற்காலிகமாக மூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு பணிபுரிந்துவரும் 50 தூதர்கள் மற்றும் அலுலவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.