கனடா வந்த ஆறே நாட்களில் மனைவியைக் குத்திக் கொன்ற இந்திய கணவன்!
கனடாவிற்கு வந்த ஆறே நாட்களில், தனது மனைவியைக் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு எதிரான இரண்டாம் நிலை கொலைக் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் அபோட்ஸ்ஃபோர்ட் நகரில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2024 மார்ச் 15 அன்று, தனது 41 வயது மனைவி பால்விந்தர் கவுரை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த கணவரான ஜக்பிரீத் சிங் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
மனைவியைக் குத்திக் கொன்றதை ஜக்பிரீத் சிங் ஒப்புக்கொண்ட போதிலும், தனக்கு 'கொலைக்குற்றம்' விதிக்கக் கூடாது எனவும், அதை 'சட்டவிரோத மனிதக் கொலை' என குறைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியபோது, அவர்தான் முதலில் கத்தியை வீசியதாகவும், அவரிடமிருந்து கத்தியைப் பறிக்க முயன்றபோது தற்செயலாக அவரது வயிற்றில் குத்திவிட்டதாகவும், அதன் பின்னர் என்ன நடந்தது என்று தனக்கு நினைவில்லை என்றும் ஜக்பிரீத் சிங் கூறினார். திடீர் ஆத்திரமூட்டல் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்ததாக அவர் வாதிட்டார்.
எனினும், உடற்கூறாய்வு அறிக்கையில் பால்விந்தர் கவுரின் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் 7 பலத்த கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததும், அதிக ரத்தப்போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
ஜக்பிரீத் சிங்கின் வாதங்களை நிராகரித்த பிரிட்டீஷ் கொலம்பியா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆண்ட்ரியா ஓர்மிஸ்டன், அவரது சாட்சியங்கள் முற்றிலும் "நம்பகத்தன்மையற்றவை மற்றும் நம்பமுடியாதவை" என்று கூறினார்.
கொல்வதற்கோ அல்லது கடுமையான காயம் ஏற்படுத்துவதற்கோ லட்சியம் இல்லை என்ற சந்தேகத்தை எழுப்ப அவரது சாட்சியம் தவறிவிட்டது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். கொலை நடந்தபோது 51 வயதாக இருந்த ஜக்பிரீத் சிங், கடந்த 2024 மார்ச் 9 அன்றுதான் இந்தியாவிலிருந்து கனடா வந்தடைந்தார்.
வந்த ஆறாவது நாளே இக்கொலையைச் செய்துள்ளார். அவரது மனைவி பால்விந்தர் கவுர், பல்கலைக்கழகத்தில் படிக்கும் தங்களது மகளுக்கு உதவியாக இருப்பதற்காக 2022-லேயே கனடாவுக்குக் குடிபெயர்ந்திருந்தார்.
கணவர் ஜக்பிரீத் சிங்கிற்கு விசா விண்ணப்ப ஆவணங்களைச் சமர்ப்பித்து, அவரை கனடாவுக்கு வரவழைத்ததே பால்விந்தர் கவுர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.