அமெரிக்காவில் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுவர்களை கொன்ற இந்தியர்!
அமெரிக்காவில் ஜனவரி 19, 2020 அன்று விளையாட்டுத்தனமான சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
இச்சம்பவத்தை துப்பு துலக்கிய கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து துறை தெரிவித்திருக்கும் தகவல்களின்படி, 3 சிறுவர்களும் அவர்களில் ஒரு சிறுவன் வீட்டில் இரவு தங்கியிருக்கின்றனர்.
விளையாட்டால் பறிபோன உயிர்கள்
அப்போது அதில் ஒருவன் டோர்பெல் டிட்ச் (Doorbell Ditch) விளையாடலாம் என கூறியிருக்கிறான். சம்மதித்த அனைத்து சிறுவர்களும் அருகிலிருந்த மோட்ஜெஸ்கா ஸம்மிட் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி விட்டு தங்கள் காருக்கு வேகமாக திரும்பியிருக்கின்றனர்.
சிறுவர்கள் மணி அடித்த வீட்டில் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அனுராக் சந்திரா (45 ) தங்கியிருந்தார். சிறுவர்களின் செயலால் , கோபமடைந்து காரில் தப்பிய அந்த சிறுவர்களை தனது காரில் துரத்தி சென்றுள்ளார்.
ஸ்குவா மலை சாலையில் தனது காரின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ.க்கும் மேல் அதிகப்படுத்தி சிறுவர்களின் கார் மீது மோதினார்.
ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
இந்த விபத்தில் 6 சிறுவர்களில் 16 வயதுடைய டேனியல் ஹாகின்ஸ், ஜேக்கப் இவாஸ்கு மற்றும் டிரேக் ரூயிஸ் ஆகிய 3 சிறுவர்கள் அங்கேயே பலியானார்கள். 18, 14, 13 வயதுடைய மீதம் 3 பேர் காயத்துடன் தப்பித்தனர்.
இதனையடுத்து ஜனவரி 20, 2020 முதல் ரிவர்ஸைட் பகுதியில் உள்ள ராபர்ட் பிரெஸ்லி தடுப்புக்காவல் மையத்தில் அனுராக் சந்திரா காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மேல் விசாரணை தீர்ப்பு கடந்த 14 ஆம் திகதி வழங்கப்பட்டது.
ரிவர்ஸைட் கவுண்டி பகுதியின் நீதிமன்றத்தில், நடுவர் குழு குற்றவாளி என ஒருமித்த கருத்தை தெரிவித்தவுடன், சந்திராவிற்கு பரோலில் வெளி வர முடியாதபடி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.