கனடாவில், ஜோதிடர் என 8 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் இந்தியா தப்பியோட்டம்
இந்தியா தப்பியோட்டம் கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.