இந்திய மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்: பிரதமர் மோடி கமலா ஹாரிசுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு தலைவர்களும் தங்கள் துடிப்பான இருதரப்பு கூட்டாண்மை, வளர்ந்து வரும் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் பி 2 பி இணைப்புகளை குறித்து விவாதித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “அமெரிக்காவின் துணை அதிபராக உங்கள் (கமலா ஹாரிஸ்) தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.
ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் எங்கள் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டியதற்காக நான் அமெரிக்காவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான பங்காளிகள் என்றும் அவர்கள் ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான துடிப்பான மற்றும் வலுவான மக்கள் தொடர்பு எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை" என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டறிக்கைக்குப் பிறகு வெள்ளை மாளிகை வளாகத்தில் உரையாடினர்.