இந்திய விமானி மோசமான செயல் ; அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்
பையில் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து, 'ஏர் இந்தியா' விமானத்தின் துணை விமானி ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கடந்த 14ம் திகதி டில்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற, 'ஏர் இந்தியா' விமானத்தில், 'பொசிஷனிங் க்ரூ' எனும் சிறப்பு பணியாக, அங்கிருந்து புறப்படும் விமானத்தை இயக்குவதற்காக துணை பைலட் ஒருவர் சென்றுள்ளார்.

அனுமதி மறுப்பு
விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டபோது, பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்க சட்டப்படி அவர் நாட்டில் நுழைய தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டு, விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
அமெரிக்காவின் சில மாகாணங்களில் கஞ்சா சட்டப்பூர்வமானாலும், குடியேற்ற சட்டங்கள் மற்றும் விமான நிலைய விதிகளின்படி அது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, 'ஏர் இந்தியா' தெரிவித்துள்ளது.