ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் ; அலறிய பயணிகள்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த இண்டிகோ விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று (21) மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.
அச்சத்தில் அலறிய பயணிகள்
ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காற்றின் சுழற்சி காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதியிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
கடும் மழை மற்றும் புழுதிப்புயலால் டெல்லியில் இருந்து புறப்படும் விமானச் சேவைகளும், தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையால் முன்பகுதி சேதமடைந்தது.
இதனால் பயணிகள் அச்சமடைந்த நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.