வரலாற்றுச் சாதனையை புரிந்த இந்திய வீராங்கனை.!
டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு (கிளாஸ் 4 பிரிவு) ஆட்டத்தில் பிரேஸிலின் ஒலிவேரியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய வீராங்கனை பவினா படேல் காலிறுதிக்கு நுழைந்தார்.
அதனை தொடர்ந்து, நடந்த காலிறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில உள்ள செர்பியாவின் போரிஸ்லவா வீராங்கனையுடன் மோதினார். இதில், 3-0 என வீழ்த்திய இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த காலிறுதி ஆட்டத்தில் 18 நிமிடங்களில் 11-5, 11-6, 11-7 என்ற கணக்கில் அபாரமாக ஆடி இந்திய வீராங்கனை அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியது.
நேற்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில், சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவினா பட்டேல், 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையையும், நாளை இறுதி போட்டியில் விளையாடும் வரலாற்றுச் சாதனையும் பவினா படேல் பெற்றார்.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் தோல்வியை சந்தித்தார். சீன வீராங்கனையிடம் 3-0 செட் கணக்கில் போராடி தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இதன் மூலம் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் கலந்துகொண்ட முதல் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தையும், இந்த பிரிவில் முதல் வெள்ளி பதக்கm வெல்லும் வரலாற்றுச் சாதனையையும் புரிந்துள்ளார்.