அமெரிக்க பெண் தோழியை கொன்ற வழக்கில் இந்திய மாணவர் கைது!
அமெரிக்காவில் 19 வயது பெண் தோழியை கொலை செய்ததாகக் கூறப்படும் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர், ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரிஸோனா மாநிலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், வருண் பட்சிகாரி (20) என்ற இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிஸோனா பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அனலிட்டிக்ஸ் கற்று வந்ததாகக் கூறப்படும் வருண், தனது 19 வயது பெண் தோழியான ரூபியை கொலை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி மாலை சுமார் 4 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், ரூபி படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவருடன் நெருங்கிப் பழகிய வருண் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.
கொலைக்குப் பின்னர், ரூபியின் செல்போனை பயன்படுத்தி அவரது பெற்றோருக்கு, தான் நலமாக இருப்பதாகவும் குற்றமற்றவர் என்பதுபோன்றும் செய்திகள் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்தச் செய்திகள் தொடர்பில் சந்தேகமடைந்த ரூபியின் பெற்றோர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, அவரது வீட்டுக்குச் சென்று நிலைமையைச் சரிபார்க்குமாறு கோரியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே ரூபி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சம்பவத்துக்குப் பின்னர் வருண் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குச் சென்று, அங்கிருந்து ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் பெர்லினிலிருந்து அவர் இந்தியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவர் டக்சான் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து இந்தியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, வருண் மீது முன்னதாகவே பல்வேறு வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரிஸோனா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், அண்மையில் அவர் வேலைவாய்ப்பை இழந்திருந்ததாகவும், அதன் காரணமாக வீட்டு வாடகையை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இதனால் அவரது விசா தொடர்பிலும் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையாளர்களின் ஆரம்ப தகவல்களின்படி, வருணுடன் கொண்டிருந்த நட்புறவை முறித்துக்கொள்ள ரூபி திட்டமிட்டிருந்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னணியிலேயே கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி ரூபியின் அறைக்கு அருகில் தங்கியிருந்த சிலர், அவரது படுக்கையறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ரூபிக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவர் நலமாக இருக்கிறாரா எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு ரூபி நலமாக இருப்பதாகவும், அந்தச் சத்தம் ஒரு வாக்குவாதத்தினால் ஏற்பட்டதாகவும் பதிலளித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அந்தக் குறுஞ்செய்திகளை ரூபி அனுப்பவில்லை என்பதும், அவரது செல்போனை பயன்படுத்தி வருண் அனுப்பியிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.