கனடாவில் இந்திய பெண் படுகொலை; காதலனுக்கு பிடியாணை!
கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதுடைய இந்தியப் பெண், கடந்த சனிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கனடா முழுவதும் பிடியாணை
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:40 அளவில், ஹிமான்ஷி குரானா காணாமல் போயுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சனிக்கிழமை காலை 6:30 அளவில் ஸ்ட்ராச்சன் அவென்யூ பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் ஹிமான்ஷி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
டொரண்டோ காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு திட்டமிட்ட கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த ஹிமான்ஷியும், சந்தேகநபராகக் கருதப்படும் அப்துல் கபூரியும் நெருக்கமான உறவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்துல் கபூரிக்கு எதிராக முதல்தரக் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, கனடா முழுவதும் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுவதியின் மரணம் குறித்து ரொறொன்ரோவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.