குட்டையில் இருந்து மீட்கப்பட்ட நால்வரின் சடலங்கள்... அடையாளம் கண்டு அதிர்ந்த குடும்பம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் குட்டை ஒன்றில் இருந்து நால்வரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நால்வரும் மீன்பிடிக்கச் சென்ற தந்தை மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் எனவும், ஒரு வாரமாக காணாமல் போனவர்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நகரமான இண்டியானாபொலிஸ் பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. செவ்வாய்கிழமை மாலை பிளஃப் சாலை மற்றும் டிராய் அவென்யூ அருகே உள்ள குட்டையில் கைல் மூர்மனின் (27) உடல் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரின் தீவிர போராட்டத்திற்கு பின்னர் மூர்மன் கடைசியாக பயன்படுத்திய வாகனம் ஒன்றை அந்த குட்டையில் இருந்து மீட்டுள்ளனர்.
குறித்த வாகனத்தில் அவரது மூன்று பிள்ளைகளின் சடலம் காணப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் மரியன் கவுண்டி உடற்கூராய்வாளர் அலுவலகம் தெரிவிக்கையில் கைல் மூர்மன் II(5),கயன்னா ஹாலண்ட்(2) மற்றும் கைரன் ஹாலண்ட்(1) என அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. ஜூலை 6ம் திகதி மாலை மூர்மன் தனது குழந்தைகளை அழைத்துகொண்டு மீன்பிடிக்க குளத்திற்கு சென்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அவரது மொபைல் தொடர்புகொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனிடையே மூர்மன் மற்றும் மூன்று பிள்ளைகளும் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், பயந்து போன குடும்பம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், அப்பகுதி முழுவதும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே குட்டைக்குள் இருந்து நால்வரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் பொலிசார் துரித நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.