காபூலில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிக்கியுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் அளித்துள்ள பேட்டி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
நஸ்ரியா என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், ஆகஸ்ட் 31 அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் காலக்கெடுவில் இருந்து தனது அனுபவங்களைப் பற்றி அமெரிக்க ஊடகத்துடன் பகிர்ந்துள்ளார்.
25 வயது ஆகும் அப்பெண் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு குடும்பத்தைப் பார்க்கவும், திருமணம் செய்து கொள்ளவும் சென்றார். ஆனால், இப்போது அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல வழி இல்லாமல் அங்கு சிக்கித் தவிக்கிறார்.
இப்போது காபூல் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் தாலிபான்கள் அமெரிக்க குடிமக்களை தேடித் தேடி வேட்டையாடுவதாக பதறவைக்கும் தகவலை நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நஸ்ரியா, "வெளிப்படையாக அவர்கள் வீடு வீடாக தேடிச் செல்கிறார்கள். யாராவது நீல நிற பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்களா என்று பார்க்க முயற்சிக்கிறார்கள்" என்று அவர் கூறினார். முன்னதாக, அவர் அமெரிக்காவிற்கு திரும்பும் விமானத்தை முன்பதிவு செய்துள்ளார். ஆனால், அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் இருந்து அவரும், அவரது கணவரும், வெளியேறும் விமானத்தில் செல்ல முயன்றதாகவும், அதற்கு இங்கே காத்திருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியதாகவும் நஸ்ரியா கூறினார்.
எனினும், அமெரிக்க பாஸ்போர்ட்டைக் காட்டினால் தாலிபான்கள் தங்களை கடந்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியும் என நஸ்ரியா கூறினார். "இரண்டு நாட்கள் நாங்கள் தெருக்களில் தூங்க வேண்டியிருந்தது. நெரிசலில் மக்கள் உண்மையில் மற்ற மக்களை மிதிக்கிறார்கள். அது எவ்வளவு மோசமானது" என்று நஸ்ரியா கூறினார்.
அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான பகை சற்று தணிந்திருக்கும் சூழலில், ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களை தாலிபான்கள் தேடித் தேடி துன்புறுத்துவதாக வெளியாகியிருக்கும் செய்தி உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.