600 தாலிபான்கள் படுகொலை: ஆப்கானில் அதிகரிக்கும் பதற்றம்
ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தாலிபான் பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார்.
கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இதைத்தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தாலிபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.
தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது. சுமார் 2 லட்சம் பேர் வாழும் பஞ்ச்ஷீர் மாகாணம் நீண்ட காலமாகவே தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறது.
இந்த மாகாணம் இப்போது அல்ல எப்போதுமே ஆதிக்ககாரர்களிடம் அடிபணிந்தது இல்லை. 1980-களில் அரச படைகளுக்கு எதிராகவும் 1990-களில் தாலிபான்களுக்கு எதிராகவும் பஞ்ச்ஷீர் மாகாண போராளிகள் சண்டையிட்டனர்.
அந்த வகையில் தற்போதும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தாலிபான்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சண்டையில் தாலிபான்கள் தரப்பில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாலிபான்கள் பிடிபட்டுள்ளனர் அல்லது சரண் அடைந்துள்ளதாகவும் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
அதேவேளையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றும் முயற்சி தொடர்ந்து நடப்பதாக தாலிபான்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தலைநகர் பசாரக் செல்லும் சாலையில் கண்ணிவெடிகள் அதிக அளவில் இருப்பதால், முன்னேறிச்செல்லும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபான்கள் வட்டாரம் கூறியுள்ளன.