ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் மூன்று கப்பல்களை தாக்கிய ஈரான்! மீண்டும் போர் மூளுமா?
அமெரிக்க மூறுகையிட்டுள்ள , ஹார்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று சரக்குக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் போர் மூளுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயல்பாட்டு மையம் (UKMTO) மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி: ஓமானுக்கு வடகிழக்கே பயணித்த லைபீரியக் கொடியுடன் கூடிய கப்பல் மீது ஈரானின் புரட்சிகரக் காவல்படையின் (IRGC) ரோந்துப் படகிலிருந்து துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

தீ விபத்தோ அல்லது கடல் சார் சூழல் பாதிப்புகளோ ஏற்படவில்லை
இதில் கப்பலின் மேல் தளம் (Bridge) சேதமடைந்தது. ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில் பயணித்த பனாமா கொடியுடன் கூடிய இரண்டாவது கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
ஹார்முஸ் நீரிணையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த மற்றொரு மூன்றாவது லைபீரியக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இக்கப்பல் தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவும், ஈரானியத் துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்த்தும், ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களிலும் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கப்பல்களில் தீ விபத்தோ அல்லது கடல் சார் சூழல் பாதிப்புகளோ ஏற்படவில்லை.
பிப்ரவரி 28 அன்று இந்தப் போர் தொடங்குவதற்கு முன்னதாக, உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெற்று வந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மேலும் நெருக்கடியை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பயணித்த மூன்று கொள்கலன் கப்பல்கள் (Container Ships) மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.