பிரித்தானியா விமானப்படை தளத்தை தாக்கியது ஈரான் அல்ல
சைப்ரஸிலுள்ள பிரித்தானியாவின் ஆக்ரோட்டிரி விமானப்படை தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் நேரடிப் பொறுப்பல்ல என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் ஈரானிய தயாரிப்பான 'ஷாஹெட்' ரக வடிவமைப்பை ஒத்திருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் தனது பாதுகாப்பு இருப்பை பலப்படுத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

ஆக்ரோட்டிரி தளம் தற்போது அதியுயர் பாதுகாப்பு
நவீன ஏவுகணைகளுடன் கூடிய ரோயல் கடற்படையின் 'வைல்ட்கேட்' உலங்குவானூர்திகள் இன்னும் சில தினங்களில் சைப்ரஸிற்கு அனுப்பப்படவுள்ளன. செவ்வாயன்று இரவு 'போயிங் சி-17ஏ குளோப்மாஸ்டர் III' ரக பாரிய இராணுவ விமானம் சைப்ரஸை வந்தடைந்தது.
இது பிரித்தானிய படைகளின் வலுவூட்டல் நடவடிக்கையின் புதிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது. வான் பாதுகாப்புத் திறன் கொண்ட எச்.எம்.எஸ். ட்ராகன் போர்க்கப்பலும் பிராந்தியத்திற்கு விரைந்துள்ளது.
பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த மோதல் சூழலில், சைப்ரஸிலுள்ள பிரித்தானிய தளங்கள் அமெரிக்கப் படைகளால் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் கீர் ஸ்டார்மர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், ஈரானிய ஆதரவுப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆக்ரோட்டிரி தளம் தற்போது அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.