இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஏவுகணைத் தாக்குதல் ; ஈரான் விளக்கம்
இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம். இஸ்ரேல் வைத்தியசாலையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை’ என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் மோதலின் 7-வது நாளான ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா வைத்தியசாலை சேதமடைந்ததோடு 89 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொரோகா வைத்தியசாலை தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் அரச ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எங்கள் இலக்கு இஸ்ரேல் இராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே.
அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ளன. அந்தப் பூங்காவுக்கு அருகே தான் சொரோகா வைத்தியசாலை உள்ளது.
நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் வைத்தியசாலையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல” என்று தெரிவித்துள்ளது.