அமெரிக்கா தாக்கினால் பதில் தாக்குதல் ; ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானில் தொடர்ந்தும் 14 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் 203 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டம், ஈரானில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் 100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவியுள்ள நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால், ஈரான், தமது மக்களை கொல்லத் தொடங்கினால், மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவ மற்றும் கப்பல் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதற்கமைய, கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களினால் இதுவரை 2,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், ஈரானிய அரசாங்கம் இணைய சேவையை முடக்கியுள்ளதால் தகவல்களைப் பெறுவதும் சரிபார்ப்பதும் கடினமாக இருப்பதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.