அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை ; திட்டவட்டமாய் அறிவித்த ஈரான்
அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் நடத்தப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை செயல்படுத்த அமெரிக்கா - ஈரான் அதிகாரிகள் சந்திப்பு நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் அதனை ஈரான் மறுத்துள்ளது.

சமீப நாள்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக வெளியான செய்திகளை ஈரான் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசிம் கரிபாபாடி மறுத்துள்ளார்.
“தொழில்நுட்ப ரீதியான எந்தச் சந்திப்பையும் இந்த வாரம் நடத்தப்போவதில்லை” என அவர் ஈரான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நாளை (29) கட்டாரில் பேச்சுவார்த்தை நடத்த ஈரானும் அமெரிக்காவும் முடிவு செய்ததாக அமெரிக்க செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
ஆனால், வெள்ளை மாளிகையில் இருந்து அதுபற்றி உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், பாகிஸ்தானுடன் இணைந்து கட்டாரும் மத்தியஸ்தம் செய்தது.
இதனைத் தொடர்ந்து, 4 நாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஜூன் 21 அன்று சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டார், நிதி அம்சங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது.
அமெரிக்காவின் தடைகள் காரணமாக முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்கள் கட்டாரில் உள்ளன. இந்த நிதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படு வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இன்று தெரிவித்தார்.