கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் இதெல்லாம் பரிசா? எந்த நாட்டில் தெரியுமா?
கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டீர்களா? ஆம் எனில் டெஸ்லா கார், ஐபோன், தங்க கட்டிகள் உள்ளிட்டவற்றை பரிசாக வெல்லலாம். இப்படி ஒரு அறிவிப்பு தான் ஹாங்காங்கில் வெளியிடப்பட்டிருக்கிறது.
கொரோனாவின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்கும் பேராயுதம் தடுப்பூசி. உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு தடுப்பூசி போடுகின்றன. தடுப்பூசி போட்டு கொள்ள மக்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளும் பரிசுகளும் ஆங்காங்கே அறிவிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஹாங்காங்கில் வெளியாகி இருக்கும் அறிவிப்புகள் இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது. 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஹாங்காங்கில் இதுவரை 15 விழுக்காடு மக்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
அனைத்து மக்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும் மக்களிடம் ஊசி போட்டு கொள்ள ஆர்வம் இல்லை.
ஹாங்காங் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மக்களிடையே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவது அவசியமென்பதால் ஹாங்காங் நிர்வாகம் அங்கு செயல்படும் பெரு நிறுவனங்களின் உதவியை நாடியது.
இதனை அடுத்து பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு என பரிசுகளை அறிவித்துள்ளன. இதன்படி , SUN HUNG KAI நிறுவனம் ஆகஸ்ட் 31க்குள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஐபோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
லீ ஷா கீ ஹெண்டர்சன் நிறுவனம் தங்க கட்டிகளை வழங்குவதாகவும், குட்மேன் நிறுவனம் டெஸ்லா கார் வழங்குவதாகவும் அறிவித்துள்ளன.இவை தவிர உணவகங்களில் கட்டண தள்ளுபடி, நிறுவனங்களில் ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, மந்தமாக இருந்த தடுப்பூசி திட்டம் வேகமெடுத்துள்ளது. பலர் தடுப்பூசி போட்டு கொள்ள முன்பதிவு செய்திருப்பதாக ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.