ஏரியில் கவிழ்ந்த படகு... இரண்டு உயிர்களைக் காப்பற்றிய சிறுவனுக்கு வீரப்பதக்கம்
கனடாவில், ஏரி ஒன்றில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் ஒருவனுக்கு வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள Wabamun ஏரியில் பொழுதுபோக்குவதற்காக தங்கள் பெற்றோருடன் சென்றுள்ளனர் பெஞ்சமினும் (Benjamin Gerber) அமெலியாவும் (Amelia).
பெஞ்சமினுக்கு அப்போது 12 வயது, அமெலியாவுக்கு 10 வயது.

ரப்பர் படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெஞ்சமினும் அமெலியாவும் கரைக்குத் திரும்பும்போது, படகு ஒன்று கவிழ்ந்து கிடப்பதையும், இரண்டு ஆண்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறார்கள் இருவரும்.
அவர்களில் ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார்.
உடனே பெஞ்சமின் கரையிலிருந்த தன் தாயைப் பார்க்க, என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய், போ என்று அவர் கூற, உடனே தண்ணீருக்குள் குதித்துள்ளார்கள் பிள்ளைகள்.
விடயம் என்னவென்றால், பெஞ்சமினும் அமெலியாவும் அருமையாக நீந்துபவர்கள், மட்டுமின்றி, இருவரும் Junior Lifeguard Club என்னும் அமைப்பில் உறுப்பினர்கள்.
ஆக, உடனே இருவரும் தண்ணீருக்குள் குதிக்க, பெஞ்சமின் சுயநினைவின்றிக் கிடந்தவரை 80 அடி தூரத்துக்கு இழுத்துக்கொண்டே நீந்தி கரைக்குக் கொண்டுவந்துள்ளார்.
இத்தனைக்கும் 12 வயதேயான பெஞ்சமினை ஒப்பிடும்போது அந்த நபரின் எடையும் அதிகம், உயரமும் அதிகம். இருந்தாலும் சற்றும் யோசிக்காமல், தனது நீச்சல் பயிற்சியை நம்பி அவரை கரை சேர்த்துள்ளார் பெஞ்சமின்.
இந்நிலையில், இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய பெஞ்சமினுக்கு தற்போது வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், M.G. Griffiths Certificate என்னும் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த M.G. Griffiths Certificate என்பது, கனடாவின் Lifesaving Society Canada என்னும் அமைப்பு வழங்கும், நாட்டிலேயே இரண்டாவது உயரிய வீர விருது ஆகும்.
பெஞ்சமினின் தங்கையான அமெலியாவைப் பொருத்தவரை, சான்றிதழ் பெற, அவர் தனக்கு 15 வயது ஆகும் வரை காத்திருக்கவேண்டும்.