கட்டாய இராணுவப் பயிற்சியில் இணைந்த முதல் இளவரசி இசபெல்லா
டென்மார்க்கில் கட்டாய இராணுவ சேவையில் பயிற்சி பெறும் முதல் பெண்மணியாக இளவரசி இசபெல்லா பெருமை பெற்றுள்ளார்.
டென்மார்க் அரச குடும்பத்தில் பாரம்பரியமாக இராணுவ சேவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் பட்டத்து இளவரசர் கிறிஸ்டியனும், இராணுவ முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்து, தற்போது 2ஆம் லெப்டினன்டாகப் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில், புதிதாக விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கட்டாய இராணுவ சேவைத் திட்டத்தில் அவரது சகோதரியான இசபெல்லாவும் சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் உயர்நிலைப் படிப்பை முடித்த இசபெல்லா, பெண்களை உள்ளடக்கிய மற்றும் நீண்டகால பயிற்சியைக் கொண்ட விரிவுபடுத்தப்பட்ட தேசிய சேவை அமைப்பின்கீழ் பணியாற்றும் முதல் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இதன் மூலம், அரச குடும்பத்திலிருந்து முழுமையான கட்டாய இராணுவ சேவை பயிற்சி பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை இசபெல்லா பெறுகிறார். மேலும், இந்தச் சேவைக்காக எந்த ஊதியமும் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.