கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஒட்டுமொத்தமாக அழிந்த தீவு!
கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலையால் ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்று டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளதுடன் சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது. கடந்த 15 ஆம் திகதி திடீரென வெடித்து சிதறியது.
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது. சுனாமி அலைகள் டோங்கோ நாட்டின் பல்வேறு தீவுகளுக்குள் புகுந்தன. அவற்றில் சில தீவுகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் புகுந்தன.
இதன்காரணமாக மங்கோ தீவு முற்றிலும் தரைமட்டமானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள் அந்த தீவில் உள்ள அனைத்து வீடுகளும் தரைமட்டமாகின. ஃப்னொய்புவா தீவில் இரண்டு வீடுகள் தவிர எஞ்சிய வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின.
எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக டோங்கோ அரசு தெரிவித்துள்ளது. பேரழிவிற்கு பிந்தைய பாதிப்பு தொடர்பாக டோங்கோ அரசு வெளியிட்ட முதல் தகவல் இதுவாகும்.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதேவேளை சுனாமி தாக்கிய பல்வேறு தீவுகள் தற்போது வெளி உலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பேரழிவிற்கு பின்னர் உணவு, குடிநீருக்கு டோங்கோவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் டோங்கோவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.