ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிர பதற்ற நிலை
மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, தாக்குதல் தற்போது நடைபெற்று வருவதுடன், இது “சிறிய அளவிலான தாக்குதல் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்பாக, இஸ்ரேல் நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளது. ஈரான் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளின் கீழ் பொதுமக்கள் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுக் கூட்டங்கள், வேலைக்கு செல்வது மற்றும் பாடசாலைகளுக்கு செல்வது போன்றவை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன. இஸ்ரேல் தனது வான்வழியையும் மூடியுள்ளது.
தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களை நீக்குவதற்காக முன்னெச்சரிக்கை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை இலக்காகக் கொண்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.
ஈரான் தலைநகர் Tehran நகரில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாதத்தில் இரு நாடுகளும் 12 நாட்கள் நீடித்த வான்படை மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில், அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என முன்பே அமெரிக்கா – இஸ்ரேல் எச்சரித்திருந்தன.
இந்த தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அணு மோதலை தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கும் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், தன்னைத் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கும் என ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன், அமெரிக்க படைகள் தங்கியுள்ள பிராந்திய தளங்களும் தாக்குதலுக்குள்ளாகலாம் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இணைந்து ஈரானின் அணு நிலையங்களை தாக்கியபோது, ஈரான் கட்டாரில் உள்ள அமெரிக்காவின் Al Udeid Air Base மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த புதிய தாக்குதல் மத்திய கிழக்கில் பெரிய அளவிலான இராணுவ மோதலுக்கான அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.