இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு கவசம் பிரமாண்ட 'அயர்ன் டோம்'
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் துவங்கியுள்ளது. எல்லையில் உள்ள காசாமலைக் குன்று பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பதிலடியாக இஸ்ரேல் விமானப்படை வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. காசா பகுதியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், நடுவானிலேயே வெடித்துச் சிதறும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. நடுவானில் ஒரு பாதுகாப்பு கவசம் இருப்பது போலவும், அதில் மோதி ஏவுகணைகள் வெடித்துச் சிதறுவது போலவும் அந்தக் காட்சிகள் உள்ளன.
காசா பகுதியில் இருந்து வரும் ஏவுகணைகளை இஸ்ரேலின் மிகவும் நம்பிக்கைக்குரிய, 'அயர்ன் டோம்' எனப்படும் இரும்பு கவசம் தடுத்து விடுகிறது. இஸ்ரேலின் இந்த ஏவுகணை எதிர்ப்பு முறை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2007ல், காசா மலைப் பகுதியை ஹமாஸ் அமைப்பினர் கைப்பற்றிய அதே நேரத்தில், அயர்ன் டோம் முறையை இஸ்ரேல் கட்டமைத்தது. இஸ்ரேலின் ரபேல் நிறுவனமும், இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து இந்த பாதுகாப்பு கவச முறையை உருவாக்கியுள்ளன.
முதல் முறையாக, 2011ல் இது பயன்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் பல முனைகளில் தாக்குதல் நடந்தாலும் சமாளிக்க முடியும். ஏவுகணைகள் மட்டுமல்லாமல், விமானம், ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்களையும் தாக்க முடியும். வெறும், 90 கிலோ எடை உடையது என்பதால், எந்த இடத்துக்கும் இதை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். தாக்குதல்களில் இருந்து தன் நகரங்களை காப்பதற்காக, இஸ்ரேல் இதை பயன்படுத்துகிறது. 4 முதல், 70 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் இதற்கு உண்டு.
இந்த அயர்ன் டோம் என்பது, மூன்று முக்கிய அம்சங்களை உடையது. முதலில் ரேடார் மூலம், எதிரி நாட்டு ஏவுகணை அடையாளம் காணப்படுகிறது. இதையடுத்து அதில் உள்ள கண்காணிப்பு முறை செயல்பட்டு, தாக்குதலுக்கு தயாராகிறது. அதன்பின் இலக்கை நோக்கி, எதிர்தாக்குதல் நடத்தும் ஏவுகணை செலுத்தப்படுகிறது. அது துல்லியமாக தாக்கி, எதிரி ஏவுகணையை நடுவழியிலேயே அழித்து விடுகிறது.
எந்த நேரத்திலும், எந்த பருவநிலையிலும் எங்கும் இதை பயன்படுத்த முடியும். ஒரு ரேடார், கண்காணிப்பு அமைப்பு மற்றும் 20 எதிர்ப்பு ஏவுகணைகள் அடங்கியது, 'பேட்டரி' எனப்படுகிறது. ஒரு பேட்டரியின் விலை, 735 கோடி ரூபாய். ஆனால் ஒரு ஏவுகணையின் விலை, 37 லட்சம் ரூபாய் மட்டுமே. இதன் வாயிலாக நுாற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவது தடுக்கப்படுகிறது.
மேலும், சொத்துக்கள் சேதமடைவதும் தடுக்கப்படுகிறது. இதுவரை, 2,400 ஏவுகணை தாக்குதல், இந்த அயர்ன் டோம் வாயிலாக முறியடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.