உளவு மென்பொருள் விற்பனையை மறுபரிசீலனை செய்யும் இஸ்ரேல்
பெகாஸஸ் உளவு மென்பொருளால் சா்ச்சைகள் எழுந்துள்ளதையடுத்து, அத்தகைய ஊடுருவல் மென்பொருள்களை இஸ்ரேல் நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு விற்பனை செய்வதை மறுபரிசீலனை செய்வதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் ஹாரெட்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது,
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் சா்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக விவாதிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
என்எஸ்ஓ நிறுவனம் மட்டுமன்றி, இஸ்ரேலின் பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்திருக்கக் கூடிய உளவு மென்பொருள்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உளவு விகாரங்களுக்கான துணைக் குழு உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்களும் இந்த விவாதத்தில் பங்கேற்கவிருப்பதால், சிறப்புக் கூட்டத்தின் நிகழ்வுகள் ரகசியமாக வைக்கப்படும். அந்தக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
எனினும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு தலைவா் ராம்பென் பராக் இந்தத் தகவலை மறுத்துள்ளாா்.
காண்டிரு, குவாட்ரீம் போன்ற இஸ்ரேல் நிறுவனங்களும் பிறரது செல்லிடப்பேசிகளில் ஊடுருவி வேவு பாா்க்கக் கூடிய மென்பொருள்களை ஜனநாயக ஆட்சி முறையைப் பின்பற்றாத அரசுகளுக்கு விற்பனை செய்துள்ளன என்று ஹாரெட்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானவா்களின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாக சா்வதேச ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஊடகங்கள், தன்னாா்வலா்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோரின் செல்லிடப்பேசிகள் பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பாா்க்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள், கடுமையான குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே பெகாஸஸ் உளவு மென்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அந்த மென்பொருளைக் கொண்டு ஆட்சியாளா்களுக்கு எதிரானவா்கள் உளவு பாா்க்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சம்பந்தப்பட்ட நாடுகளில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், உளவு மென்பொருள்களை தங்களது நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு விற்பனை செய்வது குறித்து இஸ்ரேல் நாடாளுமன்றக் குழு விவாதிக்கவிருக்கிறது.