போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஹமாஸ் ஒப்படைத்த உடலுக்கு பதிலாக இஸ்ரேல் நடவடிக்கை
இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமுலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர்.
அந்த உடல், கடந்த 2024ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது.
அந்த உடல் ஒப்படைக்கப்பட்டதற்குப் பதிலாக, இஸ்ரேலிலிருந்த 15 பாலஸ்தீனியர்களின் உடலங்களை அந்த நாட்டு அரசு காஸாவுக்கு அனுப்பியதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.

இதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவது உறுதியாகியுள்ளது.
இத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்த திட்டம் காஸாவில் கடந்த மாதம் 10 ஆம் திகதி அமுலுக்கு வந்ததிலிருந்து, இதுவரை 24 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினா் ஒப்படைத்துள்ளனர்.
பதிலுக்கு, 315 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது.