லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: பலி எண்ணிக்கை 4,300 ஆக உயர்வு!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,300-ஐக் கடந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் பொது சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 2-ஆம் திகதி முதல் ஜூலை 3-ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் 4,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் 12,199 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருப்பினும், இந்த ஒப்பந்தம் லெபனானில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக போர்நிறுத்தத்திற்காக, இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலையும் நீதியையும் லெபனான் அரசு விட்டுக் கொடுத்துவிட்டதோ என்று அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.