இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் வீரர்களுக்கு கிடைத்த தண்டனை
லெபனானில் இராணுவ நடவடிக்கையின் போது இயேசு கிறிஸ்து சிலையைச் சேதப்படுத்திய இரண்டு இஸ்ரேல் வீரர்களுக்கு, அந்நாட்டு இராணுவம் 30 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்ரேல் இராணுவம் அண்மையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அங்கிருந்த இயேசு கிறிஸ்துவின் சிலுவையை வீரர் ஒருவர் சுத்தியலால் உடைத்துள்ளார்.

மற்றொரு வீரர் அதனைப் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தச் செயல்கள் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தின.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய இஸ்ரேல் இராணுவம், வீரர்களின் இந்தத் தவறான நடத்தை இராணுவ உத்தரவுகளை மீறும் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு வீரர்களுக்கும் தலா 30 நாட்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் வீரர்களின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கலைப்பொருட்களைக் கையாள்வதற்கான இராணுவ நெறிமுறைகளை அனைத்து வீரர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.