இத்தாலி மலைப்பகுதியில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
இத்தாலியின் வடக்கே மலை பகுதிக்கு செல்லும் கேபிள் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
இத்தாலி நாட்டின் வடக்கே பீடுமோன்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா என்ற கிராமத்தில் மேகியோர் என்ற ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரை பகுதியில் இருந்து மோட்டரோன் என்ற மலை குன்று பகுதிக்கு செல்ல கேபிள் கார் வசதி உள்ளது. கொரோனா ஊரடங்கால் இந்த பகுதி வழியேயான கேபிள் கார் பயண சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன் இந்த கேபிள் கார் பயண சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மலை பகுதிக்கு 10 பேருடன் சென்ற கேபிள் கார் 985 அடி உயரத்தில் இருந்தபொழுது திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் மீட்கப்பட்டு துரின் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதன்பின்னர் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது. மீட்பு பணிகளும் ஏறக்குறைய முடிந்து விட்டன.