ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை; பிரித்தானியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் நபர்!
யாழ் பிரதேச ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் கைது
நேற்றையதினம் 30 ஆம் திகதி பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 49 வயதுடைய இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண பகுதி ஊடகவியலாளர் நிமலராஜன்
யாழ்ப்பாண பகுதி ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது வீட்டினருகே விட்டுச் சென்ற துவிச்சக்கரவண்டியை வைத்து விசாரணை செய்த யாழ்.பொலிசார் கொலைச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை கைது செய்திருந்தனர்.
அது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு முன்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் குற்றமற்றோர் என நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தைச்சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.