யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம்: குடும்பத்தினர் முறைப்பாடு
அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மாணவியின் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
குறித்த முறைப்பாட்டில், உயிரிழந்த பெண்ணுக்கு எந்த விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 23ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தொடர்ந்து, மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியைகள் நேற்று (25.12.2023) இடம்பெற்ற நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் மாணவியின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |