அரச வங்கியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் மாயம்
அரச வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியில் இடம் பெற்றுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற நபர் ஒருவர் நகைகளை மீட்பதற்கு முயற்சித்த போது நகைகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கி முகாமையாளர் தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 12 பேர் அடகு வைத்த நகைகளும் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.
2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கக் கடனுக்காக அடகு வைக்கப்பட்ட நகைகள் இவ்வாறு காணாமல் போனதாக சிஐடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரச வங்கியின் முகாமையாளர் காணாமல் போன நகைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த புகாரில், நகைகள் வைக்கப்பட்டிருந்த லொக்கரின் 2 சாவிகள், வங்கி ஊழியர்கள் இருவரின் பிடியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நகைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனி குழுவொன்றை மட்டக்களப்புக்கு அனுப்ப உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.