காபூல் இரண்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: மரணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் விமானத்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் 2 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்து வெளிநாட்டினர் அதிகளவில் வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதன் காரணமாக காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் விமானத்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் 2 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
மேலும் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளும் கூட்டத்தினரை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதல் நடந்தவுடன் 40 பேர் பலியானதாகவும், 120 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 12 பேர் காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் வீரர்கள் ஆவர். இந்த தாக்குதலில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 140-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
குண்டு வெடிப்பு தாக்குதல் அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பில் குழந்தைகளும் பலியானதாக தலிபான் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். ஆனாலும் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் பற்றிய முழுமையான விவரம் உடனடியாக தெரியவில்லை.