அமெரிக்க தீர்வை வரியை குறைக்க முக்கிய கலந்துரையாடல்
அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் குறித்த அரசு அதிகாரிகளுக்கு இடையில் ஓன்லைன் முறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலகளாவிய வரியை விதிக்க முடிவு செய்தார். குறைந்தபட்ச விகிதம் 10% ஆக இருந்ததுடன், இது சில நாடுகளுக்கு மிக அதிகமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய வரிக் கொள்கையை உலகெங்கிலும் உள்ள நாடுகள் கடுமையாக எதிர்த்ததுடன், இந்த வரி நீக்கப்படாவிட்டால் வலுவான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதாக சீனா கூறியது. ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஒன்றாக எதிர்ப்பதாக கூறியிருந்தது.
அத்தகைய சூழலில், இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது.
இலங்கை இது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி, அமெரிக்கா இலங்கை மீதான வரியை 30% ஆகக் குறைத்து, புதிய வரி முன்மொழிவை எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.
எனினும் அந்த 30% மேலும் குறைக்க அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடலை நடத்த முடிவு செய்தது.
அதன்படி, நிதி அமைச்சு செயலாளரின் தலைமையில், குறித்த அதிகாரிகளின் பங்கேற்புடன், ஒன்லைன் முறையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடல்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.